Tuesday, November 19, 2013

உத்தவ கீதை - 1

உத்தவ கீதை - 1



பரந்தாமன் ஸ்ரீ கிருஷ்ணன் பூலோகத்தில் தன் பணியெல்லாம் முடிந்த  பின் வைகுந்தம் திரும்புமுன் மந்திரி  உத்தவருக்கு உபதேசித்ததே இந்த உத்தவ கீதை;


பிரம்மனும் மற்ற தேவர்களும் பரந்தாமனைப் பார்க்க துவாரகை வந்தார்கள்; வணங்கினார்கள்; 'கிருஷ்ணா, கோவிந்தா,
இன்னல் செய்தவர்களையெல்லாம் இல்லாது செய்தவனே,
மக்கள் துயர் தீர்த்த மாதவா, வையம் விட்டு வைகுந்தம் வா;
எங்களோடு வர வேண்டும் தேவ லோகம், எங்கட்கும் வேண்டும் உங்களோடு இருக்கும் யோகம்;'என்றனர்; 'யாவரையும் படைக்கும் பிரம்மா தேவா, யாதவர்களின் அழிவு  ஆரம்பமாகிவிட்டது, அறியாயா ?  ஆணவத்தால் அழியப் போகின்றனர் யாதவர்கள்;

அவர்கள் அழிந்தபின் அடியேன் வருவேன் மேலோகம், அதுவரை இருப்பேன் பூலோகம்' என்றுரைத்தான்; பிரம்மனையும்  மற்றவர்களையும் அனுப்பி வைத்தான்;

கண்ணன் பேசுவதைக் கேட்ட உத்தமர் கலவரமடைந்தார்;
கண் கலங்கினார்;செய்வதென்னவென்று தெரியாது திகைத்து நின்றார்;

துவாரகா நகரத்தில் கெட்ட சகுனங்கள் பல நிகழ்ந்தது;
அது ஊர்ப் பெரியவர்களை வருத்தத்தில் ஆழ்த்தியது;
கிருஷ்ணனிடம் சென்றனர்;
தமக்கு வழி காட்ட வினவினர்;

'நல்லோர் சாபம் நமை வாட்டுகிறது;
துவாரகை விட்டுச்செல்வோம், பிரபாச தீர்த்தம் நோக்கிச்செல்வோம்;
அவ்வாறு சென்றால் உயிர் பிழைப்போம்;
அன்னதானம் செய்வோம்;
நல்ல வழியில் வாழ்வோம்;
நாம் பெற்ற சாபத்தால் வரும் சங்கடத்தைத் தடுக்க அதுவே வழியாகும்;'

பரந்தாமன் உரைத்தான்;
அவன் சொல்லுக்குப் பணிந்து மக்கள் புறப்பட்டனர் பிரபாச தீர்த்தம் நோக்கி;
வருங்காலத்தில் விழையப்போகும்இன்னல்களை மனதில் தேக்கி;


பகவான் பேசுவதை எல்லாம் பொறுமையுடன் கேட்டார் உத்தவர்;
பின் பேசினார்;
'பரந்தாமா, தேவாதி தேவா,எல்லோரின் இன்னல்களையும் தீர்க்கும்
எசொதை மைந்தா,தங்களைப் பிரிந்து எப்படி இருப்பேன் நான் ?
தங்களோடு வைகுண்டம் வரவேணும் நான்,இதற்கு அருள் புரிய வேண்டும் நீர்;'


உத்தவரின் தூய உள்ளத்தையும் அதில் விளைந்த எண்ணத்தையும் கேட்ட கிருஷ்ணன் பின்வருமாறு உரைத்தான்;

'உத்தவரே, உத்தமரே,உயர்ந்தவரே, நாளை நடக்கப்போதை நானுமக்குசொல்கிறேன்; கேளும்;

பிரம்மன் கேட்டுக்கொண்ட பணிகலெல்லாம் பழுதேதுமின்றி நிறைவேற்றிவிட்டேன்;
பெற்ற சாபத்தால்  யாதவ குலம் தன்னோடே சண்டையிட்டு அழிந்துபோகும்;
இன்றிலிருந்து ஏழாவது நாள் இந்த நிலத்தை நீர் விழுங்கும்;
என்று நான் இவ்வுலகத்தை விட்டுச் செல்கிறேனோ,
அன்று முதல் இவ்வுலகத்தை கலிபுருடன் பிடித்துக்கொள்வான்;
இவ்வுலகம் மங்களம் இழந்து மாசுபட்டுப் போகும்;
மக்கள் மாக்கள் ஆவார்கள்;அதர்மத்தையேச் செய்வார்கள்;'

இதனைத் தொடர்ந்து
இன்னும் சொன்னான் கிருஷ்ணன்;
அவை ...

                                                                        ( கீதை தொடரும் )

No comments:

Post a Comment